பணி நீக்கம்-டாடா, விப்ரோ வழியில் சத்யமும்!
மும்பை: டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது சத்யம் நிறுவனமும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய ஆரம்பித்துள்ளது.
தனது நிறுவனத்தின் ஹைதராபாத், புனே, விசாகப்பட்டணம் கிளைகளில் பணியிலிருந்த 400 பொறியாளர்களை சத்யம் பணி நீக்கம் செய்துள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவனம் அனுபவம் வாய்ந்த 150 மின்னணு பொறியாளர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இவர்கள் அனைவரும் எஸ் பேண்ட் என வகைப்படுத்தப்பட்டவர்கள். அதாவது 2 முதல் 5 வருட அனுபவம் மிக்கவர்கள். மேலும் பல தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்னும் சிலரை பணியிலிருந்து விலகுங்கள் அல்லது ஒப்பந்த அடிப்படை ஊழியர்களாக மாறுங்கள் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளதாம்.
இந்த நடைமுறை வழக்கமானதுதான் என்றும், உற்பத்தித் திறனை அதிகரித்தல், ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இப்படிச் செய்யப்படுவதாகவும் சத்யம் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் 4,500 பேர் நீக்கம்?:
மேலும் 4,500 பேரை பணி நீக்கம் செய்யும் முயற்சியிலும் இப்போது சத்யம் தீவிரமாக இறங்கியுள்ளது. முதல்கட்டமாக இவர்களில் 1,500 பேர் கடுமையான விதிமுறைகளுடன் கூடிய பயிற்சிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதி 3000 பேருக்கு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அநேகமாக இவர்கள் அனைவருமே நீக்கப்படுவது உறுதி என சத்யம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் டாடா அதிரடி!:
இந் நிலையில் டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனமும் தனது அடுத்த ரவுண்ட் அதிரடிக்குத் தயாராகிறது. இந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியில் உள்ள பல ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.