மின்தடையால் உயர்நீதிமன்ற லிப்ட்டில் சிக்கிய நீதிபதிகள்!
சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதி அரிசித் பசாயத் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உயர்நீதிமன்ற லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேரம் தவிப்புக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். மின்தடைதான் இந்த தவிப்புக்கும், சிக்கலுக்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்தின் சார்பில் நேற்று மெகா லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 300 மோட்டார் வாகன விபத்து மேல் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு பைசல் செய்யப்பட்டன.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி அரிசித் பசாயத், தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மற்றும் எட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று 160 வழக்குகளை தீர்த்து வைத்து உத்தரவிட்டனர்.
அதாலத் முடிந்தவுடன், 2வது மாடியில் உள்ள லிப்ட்டில் நீதிபதி பசாயத், அவரது மனைவி சுபாலா, தலைமை நீதிபதி கங்குலி, ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மீனா குமார் உள்ளிட்ட 5 பேர் ஏறினர். லிப்ட் கீழே இறங்கத் தொடங்கியபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் லிப்ட் நடு வழியில் நின்று போனது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்தனர். அனைவரும் கடுமையாக முயற்சித்து அரை மணி நேரத்திற்குப் பின்னர் லிப்ட்டை தரைக்குக் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து அரை மணி நேர தவிப்புக்குப் பின்னர் அனைவரும் வெளியே வந்தனர்.












Click it and Unblock the Notifications