மதிமுக மண்டல மாநாடு துவக்கம்-ஜெ வாழ்த்து
மதுரை: அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி மதிமுகவின் ஒரு நாள் மதுரை மண்டல மாநாடு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது
இந்த மதுரை மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. தமுக்கம் திடலில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்ந்துள்ளனர்.
இன்று காலை மாநாட்டின் தொடக்கமாக கட்சியின் கொடியை மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான வீர இளவரசன் ஏற்றி வைத்தார். அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மாநாட்டு நுழைவாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார். பின்னர் தொண்டர் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பொருட்காட்சி ஒன்றும் தொடங்கப்பட்டது.
இன்று இரவு வைகோ நிறைவு சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டையொட்டி மதுரை நகர் முழுவதும் வரவேற்பு வளைவுகள், பிரமாண்ட கட் அவுட்கள், பேனர்கள் அலங்கரித்துள்ளன.
ஜெயலலிதா வாழ்த்து:
மாநாட்டையொட்டி வைகோவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மதிமுக சார்பில் இன்று தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா - மதுரை மண்டல மாநாடு நடைபெறுவது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பேரறிஞர் அண்ணா ஒரு சாமான்ய குடும்பத்தில் பிறந்து, சரித்திரத்தின் பக்கங்களில் நிலையான இடத்தைப் பிடித்தவர். ஏழை எளியோர்களும் யமுனை நதிக்கரையின் படிக்கட்டுகளில் அமைந்திருக்கின்ற நாடாளுமன்றத்தின் அத்தாணி மண்டபத்தில் கோலோச்சலாம், சட்டமன்ற உறுப்பினராகவும், முதல்வராகவும் பவனி வரலாம் என்ற நம்பிக்கையை விதைத்தார்.
அனைவருக்கும் ஜனநாயகக் கதவுகளைத் திறந்துவிட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் இத்தருணத்தில், எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பெரியாரின் லட்சியப் பாதையில், அண்ணாவின் கொள்கைச் சாலையில் தடம் புரளாமல் நடைபோட்டு வரும் மதிமுகவின் மாநாடு சிறக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications