தினமலர் புகார்: போலீஸில் முரசொலி செல்வம் விளக்கம்
சென்னை: வேலூர் தினமலர் பதிப்பில் வெளியான நபிகள் நாயகம் கார்ட்டூன் தொடர்பாக நடந்த முஸ்லீம்கள் போராட்டம் குறித்து அவதூறாக செய்தி ஒளிபரப்பியதாக தினமலர் கொடுத்துள்ள புகார் குறித்து சன் டிவி செய்திகள் பிரிவின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் சார்பில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் விளக்க கடிதம் வழங்கப்பட்டது.
வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வெளியானது. இதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சன் டிவியில் செய்தி ஒளிபரப்பானது. இந்த செய்தி மத கலவரத்தை தூண்டும் வகையில், அவதூறான முறையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திபன் காவல்துறை ஆணையர் சேகரை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார். சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் சேகர் உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் விஜயகுமாரி, உதவி ஆணையர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அவருக்குப் பதில், சன் டிவியின் செய்திகளுக்கு நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பு. ராஜா அல்ல என்று சன் டிவி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து முரசொலி செல்வத்தை விசாரிக்க போலீஸார் தீர்மானித்தனர்.
இந் நிலையில், 3 நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ராஜா ஆஜரானார். செய்தி வெளியிட்டதில் சன் டிவி நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வத்திற்கு சம்பந்தம் உண்டு என்றும், அவரின் ஒப்புதலின் பேரிலேயே செய்தி வெளியிடப்பட்டதாக ராஜா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி முரசொலி செல்வத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். இன்று காலை போலீசில் ஆஜராக செல்வம் வருவார் என தகவல் வெளியானது. இதனால் அங்கு பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் குவிந்தனர்.
ஆனால் செல்வம் வரவில்லை. மாறாக, அவரது சார்பில் 30 வக்கீல்கள் வந்தனர். துணை ஆணையர் விஜயகுமாரி, உதவி ஆணையர் செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து முரசொலி செல்வம் சார்பாக விளக்கக் கடிதம் ஒன்றை அளித்தனர்.
அந்த கடிதத்தில், இந்த செய்தியை உள்நோக்கத்துடன் வெளியிடவில்லை என்றும், பல்வேறு நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் அந்த செய்தியை வெளியிட்டது எனவும் இந்த குற்றச்சாட்டு தங்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டிருந்தது.
தேவைப்பட்டால் ஒருவார காலத்தில் முரசொலி செல்வம் நேரில் ஆஜராவார் எனவும் வக்கீல்கள் தரப்பில் போலீசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.