கூட்டணி-சோனியாவிடம் அஜீத் சிங் கெஞ்சல்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தனது ராஷ்டிரிய லோக் தள கட்சியையும் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக் கட்சியின் தலைவர் அஜீத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு 3 உறுப்பினர்களைக் கொண்ட அஜீத் சிங் கட்சியை இழுக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால் அவர் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல சலுகைகளை கேட்டதால் கடைசி நேரத்தில் அவரை காங்கிரஸ் விட்டு விட்டது.
இதையடுத்து 3வது அணிக்கு ஆதரவாக திரும்பினார் அஜீத் சிங். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்பேன் என்றும் அறிவித்தார். இருப்பினும் சமாஜ்வாடி கட்சியின் புண்ணியத்தால், மன்மோகன்சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்து விட்டது.
தற்போது அஜீத் சிங்குடன் இணைந்து செயல்பட முடியாது என மாயாவதி கூறி விட்டதாக தெரிகிறது. பாஜக கூட்டணியிலும் அவருக்கு இடம் கிடைக்காது என்ற நிலை.
இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு சோனியா காந்திக்கு அஜீத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சோனியாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம். ரகசியமாக இந்த கடிதத்தை அஜீத் சிங் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இருந்தாலும் அஜீத் சிங்கை கூட்டணியில் சேர்ப்பது குரித்து காங்கிரஸ் தரப்பில் இதுவரை பதில் ஏதும் தரப்படவில்லையாம்.
தற்போதைக்கு உ.பியில் சமாஜ்வாடி கட்சி மட்டுமே காங்கிரஸ் மனதில் உள்ளது. சீட் ஒதுக்கீடு குறித்து இரு கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில் அஜீத் சிங்கையும் சேர்த்தால் அக்கட்சிக்கும் கணிசமான சீட்களை தந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்படும். எனவேதான் காங்கிரஸ் மெளனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உ.பி. மாநில விவசாயிகளிடையே அஜீத் சிங் கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications