ஈழத் தமிழர் பாதுகாப்பு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
டெல்லி: விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தும் அதே சமயத்தில், அந்த பகுதியில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
விடுதலை புலிகள் மீதான தாக்குதலை இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் அதே சமயத்தில், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஈழ தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. இதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பான எங்களின் கவலையை இலங்கையிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
உலக நாடுகளுடன் பொருளாதார ரீதியாக நாம் மேற்கொண்டுள்ள உறவுகள், ராணுவ விஷயத்தில் நாம் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளன.
சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய, மற்ற நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த விஷயத்தில், ஐநாவின் அமைதிப் பணிகளில் நம் நாட்டுப் படைகள் தொடர்வதன் மூலம், இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications