நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி.. ஜெயலலிதா
தேனி: அதிமுக இளைஞர், மகளிர் பாசறையில் சேருவோருக்கு அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் கிடைக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆண்டிபட்டியில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்று எம்.ஜி.ஆர் கூறியதை நினைவாக்கும் வகையில் பாசறையை கண்டுள்ளோம். இளைஞர்களை எழுச்சி பெற செய்து புரட்சி கண்ட ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி, அண்ணா, எம்.ஜி.ஆர் போல பாசறை உறுப்பினர்கள் புதிய தமிழகம், புதிய இந்தியா கண்டிட என்னோடு வாருங்கள்.
விவசாயம், எரிசக்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய நான்கையும் ஒருமுகப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன் நாட்டு மக்களின் வாழ்க்கை தரமும் உயர்த்திட அதற்காக உழைக்கவே, இளைஞர் பட்டாளமாக பாசறைகளை கண்டுள்ளோம்.
ஆட்சியிலும் வாய்ப்பு:
சமுதாய சேவையை அரசியலிலும், ஆட்சியிலும் ஈடுபாட்டுடன் செய்ய எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது. எல்லா காலத்திலும் தன்னிறைவுடன் செயலாற்ற பாசறை உறுப்பினர்கள், கல்வியையும், சுற்றத்தையும் கவனமாக பார்த்து கொண்டால் வருங்கால சூழல் நன்றாக அமையும்.
கல்வியும், கற்றலும் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். பகலில் பொருள் ஈட்டல், மாலையில் சமுதாய சேவை என பாசறையில் பாசத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
நேர்மையின் குரலாக...:
முயற்சியும், மூலதனமும் இணைந்ததே வெற்றியின் ரகசியம். வறுமையை போக்க வழிகாட்டுதல், வளர்ச்சிக்கு உரமூட்டுதல், உரிமைக்கு உரத்த குரல், வாட்டத்தை போக்க வழிகாட்டுதல், உரியவரை நாடி நல்லது செய்தல், நேர்மையின் குரலாக செயலாற்றுதல், கல்வி அறிவை வளர்த்தல், சுயதொழில், கூட்டுத்தொழில், கூட்டுறவு கலந்துரையாடி, கருத்திற்கேற்ப செயலாற்றுதல், இந்த கோட்பாடுகளை கடைபிடியுங்கள்.
தருணம் பார்த்து சேவை செய்யுங்கள். அன்போடு சேவை செய்யுங்கள். தேவை அறிந்து சேவை செய்யுங்கள். அதிமுக பாசறை என்ற சிறுதுளி பெருவெள்ளமாக வளர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கட்-அவுட் பலி, ரூ50,000 உதவி:
முன்னதாக தேனியில் 14ம் தேதி நடந்த அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக கட்-அவுட் சரிந்து விழுந்து வி்பத்துக்குள்ளானது. இதில் சலேத் என்பவர் இறந்தார். காயமடைந்த 6 பேர் தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை ஜெயலலிதா நேரல் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு ரூ.6,000, எழும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ரூ.15,000மும் வழங்கினார். பலியான சலேத் குடும்பத்தினருக்கு ரூ.50,000 வழங்கினார்.
மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்:
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க நான் முட்டுக்கட்டை போடுவதாக கருணாநிதி கூறுகிறார். நான் எப்படி அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடமுடியும். அரசு திட்டங்களை தடுக்க முடியாது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் அவர்கள் கையில்தானே உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற 27 மாத கால ஆட்சியில் வெறும் இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்புதான் வந்து கொண்டிருக்கிறது. அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை. அவை வெறும் கண்துடைப்புத்தான்.
ஏழை மக்கள் இன்னும் வறுமையில் தான் உள்ளனர். அவர்கள் கஷ்டத்தில் இருந்து மீளவில்லை. மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே திமுக ஆட்சியை தூக்கிய எறிவதற்காகவும், அரசியல் மாற்றத்துக்காகவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
எப்போதும் இல்லா எளிமை:
பின்னர் ஆண்டிப்பட்டிக்கு சென்ற அவர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு இலவச கம்ப்யூட்டர், தையல், ஓட்டுநர் பயிற்சி மையங்களையும், நூலகம் மற்றும் யோகா பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.
கடந்த இரு நாட்களாக தேனியில் முகாமிட்ட ஜெயலலிதா, எப்போதும் இல்லாத வகையில் எளிமையாக அமைக்கப்பட்ட மேடையில் பேசினார்.
நிர்வாகிகளுக்கும் சேர்:
வழக்கத்திற்கு மாறாக கட்சி நிர்வாகிகள் அமரவும் மேடையில் சேர்கள் போடப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் அவர்கள் வரிசையாக கையை கட்டி நிற்பார்கள்.
மேலும் நிர்வாகிகள் பேசவும் கூட வாய்ப்பளிக்கப்பட்டது. எழுதி வைத்த அறிக்கையை படிக்கும் ஜெயலலிதா இம்முறை தானாகவே பேசினார்.
மீண்டும் ஆண்டிப்பட்டியில் போட்டி?:
தேனி மாவட்ட மக்களுக்கு பெரும் 'ஐஸ்'சும் வைத்தார்.
இந்த மாவட்ட மக்களை என்னால் மறக்க முடியாது. என்னை மூன்று முறை சட்டசபைக்கு அனுப்பிய மக்கள் நீங்கள். ஆண்டிபட்டியில் வெற்றி பெற செய்து முதல்வராக ஆக்கினீர்கள். எத்தனை தேர்தலில் நின்றாலும் என்னை வெற்றி பெற செய்வீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று கூறி, வரும் தேர்தலிலும் ஆண்டிப்பட்டியிலேயே போட்டியிடலாம் என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications