அரிசி திட்ட தொடக்க விழா-திமுக எம்.பி, எம்.எல்.ஏ 'வாக் அவுட்'
திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசித் திட்ட தொடக்க விழாவில் திமுக எம்.பி. வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திட்டத்தின் துவக்க விழா, திருவொற்றியூரில் கலெக்டர் ராஜேந்திர குமார் தலைமையில் நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும் மீன்வளத் துறை அமைச்சருமான கே.பி.பி. சாமி, திட்டத்தை துவக்கி வைத்தார்.
பலரும் வரிசையாகப் பேசினர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க., எம்.பி., கிருஷ்ணசாமி பேசினார். அவர் பேசி முடித்ததும் திடீரென பி.ஆர்.ஓ.,வை அழைத்த அமைச்சர் சாமி, நகராட்சி கவுன்சிலரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தனியரசு என்பவரை பேச விடுமாறு கூறினார்.
இதையடுத்து, தனியரசு பேசினார். இதனால், எம்.பி. கிருஷ்ணசாமி ஆத்திரமடைந்தார். நான் ஒரு எம்.பி. நான் பேசிய பின்னர் கவுன்சிலரை எப்படி பேச அனுமதிக்கலாம் என்று கோபத்துடன் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
கவுன்சிலருக்குப் பின்னர் மாவட்ட செயலரும் திருவள்ளூர் எம்.எல்.ஏ.,வுமான சிவாஜி பேசிவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ., இருவரும் அரசு விழாவில் வெளிநடந்ததால், ஆட்சித் தலைவரும், மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்து போயினர்.
அரிசியில் அரசியலா?