சென்னை ஏரிகளில் 3,684 மில்லியன் கன அடி நீர்
சென்னை: சென்னையில் உள்ள ஏரிகளில் 3,684 மில்லியன் கன அடி நீர் கையிருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீரும் பூண்டி ஏரியை வந்தடைந்தால் அடு்த்த ஆண்டு இறுதி வரை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் கிருஷ்ணா நீர் திறந்து விடப்படுகிறது.
இந்தத் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் ஆந்திர-தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை கிருஷ்ணா கால்வாய் ஏற்கனவே சீரமைக்கப்பட்டது.
தற்போது சத்யசாய் அறக் கட்டளை சார்பில் ஊத்துக் கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரையிலான 25 கிலோ மீட்டர் தூரம் ரூ.50 கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்தப் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் சென்றார்.
பூண்டி ஏரிக்கும் சென்று நீரின் அளவையும், சீரமைக்கப்பட்ட கால்வாயையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றும் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நீர் கால்வாய் சீரமைப்பு பணி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அது இன்னும் 3 அல்லது 4 நாட்களில் பூண்டி ஏரியை வந்தடையும்.
சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் போதுமான அளவுக்கு நீர் கையிருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் 500 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 76 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 1,749 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் 1,359 மில்லியன் கன அடி என மொத்தம் 3,684 மில்லியன் கன அடி நீர் கையிருப்பு உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி வரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானது.
இன்று திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் பூண்டியை வந்தடையும்போது அடுத்த ஆண்டு இறுதி வரை சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்றார்.
அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணியை தொடர்ந்து ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை சார்பில் போரூர் ஏரி, மாதவரம் ரெட்டை ஏரிகளும் சீரமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications