தீவிரவாதத்திற்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் -பாஜக
மும்பை: தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை பாஜக ஆதரிக்கும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர்கள் தடாவை நீக்கினார்கள், பொடாவை நீக்கினார்கள். ஆனால் இப்போது ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அசாதாரணமான சட்டம் தேவை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தீவிரவாதத்தை ஒழிக்க கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தால் அதை பாஜக ஆதரிக்கும்.
பொடா மாதிரியான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்தால், அதை முதலில் பரிசீலிப்போம். பின்னர் நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக, தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக இருக்குமானால் அதை உடனடியாக ஆதரிப்போம்.
ஆனால் இப்படி ஒரு கடுமையான சட்டத்தை அமல்படுத்தும் தைரியம் சோனியா காந்திக்கோ, பிரதமர் மன்மோகன் சிங்குக்கோ ஏன், காங்கிரஸ் கட்சிக்கோ கூட இல்லை என்பதே உண்மை.
சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்வதால் பிரச்சினை தீர்ந்து விடாது. அரசின் மன நிலையில் மாற்றம் வர வேண்டும்.
தீவிரவாதிகள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்ைல. தீவிரவாதத்தை ஒடுக்கி, அமைதி திரும்பச் செய்ய கடுமையான சட்டமும், சிறப்பு கோர்ட்டுகளும் தேவை. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாவோர் எளிமையான முறையில் ஜாமீனில் வெளி வராத வகையில் கடுமையான சட்டப் பிரிவுகள் அவசியம் என்றார் வெங்கையா நாயுடு.