நானோ: 1000 ஏக்கர் தந்து வளைக்கிறது கர்நாடகம்!
பெங்களூர்: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை வட கர்நாடகத்தில் உள்ள தார்வாடில் அமைக்க முன் வருமாறும், அப்படி முன்வந்தால் 1000 ஏக்கர் நிலத்ைத கர்நாடக அரசு தரும் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைத்துள்ள நானோ தொழிற்சாலைக்கு மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
விவசாயிகளிடமிருந்து பெற்ற 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மமதா கோரிவருகிறார். ஆனால் இதை ஏற்க டாடா நிறுவனம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் மமதாவுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது போல தெரிந்தது.
ஆனால் தற்போது மமதா போட்டு வரும் புதுப் புது நிபந்தனைகளால் சிக்கல் மேலும் பெரிதாகியுள்ளது.
இந்த சிக்கல் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள், தங்கள் மாநிலங்களுக்கு வருமாறு டாடாவுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இதில் கர்நாடகம் முந்திக் கொள்ளும் போலத் தெரிகிறது.
வட கர்நாடகத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் நானோ தொழிற்சாலையை அமைக்க 1000 ஏக்கர் நிலம் தருவதாக மாநில முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ளார். இந்த அழைப்பை பரிசீலிக்குமாறும் அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
2 மாதத்திற்குள் இதுதொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எதியூரப்பாவுடன் இன்று டாடா அதிகாரிகள் சந்திப்பு
இந்த நிலையில், நானோ தொழிற்சாலை தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவை டாடா நிறுவன பிரதிநிதிகள் இன்று சந்திக்க உள்ளனர்.
சிங்கூரில் இருந்து கர்நாடகாவுக்கு தொழிற்சாலையை மாற்றுவது தொடர்பாக எடியூரப்பாவிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
எதியூரப்பாவின் 1000 ஏக்கர் அறிவிப்பைத் தொடர்ந்து டாடா நிறுவன அதிகாரிகள், எதியூரப்பாவை சந்திக்க விருப்பது கர்நாடகத்திற்கு டாடா வரலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.