உத்தபுரம் ஜாதிக் கலவரம்: 30 பேர் கைது-பதட்டம் நீடிப்பு
மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் ஏற்பட்ட ஜாதிக் கலவரம் தொடர்பாக 128 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், இரு தரப்பிலும் 30 பேரைக் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பிள்ளைமார் வகுப்பினர் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பகுதியில் கட்டிய சுவரால் தலித் மக்கள், பிள்ளைமார் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகள் வழியாக செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றிக் கொண்டு மெயின் ரோட்டுக்கு வர வேண்டிய நிலை உருவானது.
சில மாதங்களுக்கு முன்பு இந்த சுவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைத்து பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில்அங்கு மீண்டும் மோதல் வெடித்தது. திருமண விழா தொடர்பாக தலித் மக்கள் பிள்ளைமார் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசுகள் வெடித்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
வெடிகுண்டுகளை வீசி இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் ஒரு ஏட்டு காயமடைந்தார். 2 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த மோதல் தொடர்பாக 128 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 30 பேரை கைது செய்தனர். இதனால் தொடர்ந்து உத்தப்புரத்தில் பதட்டம் நீடிக்கிறது. அங்கு மோதல் வெடித்து விடாமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.