சென்னை: அரசு பஸ் மரத்தில் மோதி 35 பேர் படுகாயம்
சென்னை: சென்னை அருகே தாம்பரம் சானட்டோரியத்தில், வேகமாக வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து, சாலையோர மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 பயணிகள் படுகாயமடைந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10.20 மணியளவில் புறப்பட்டது.
பேருந்தில் 35 பயணிகளும், ஓட்டுநர், நடத்துனரும் இருந்தனர். பேருந்து 11.30 மணியளவில் தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் தொழிற்பேட்டையைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.
படு வேகமாக வந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த அனைவருமே படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
தகவல் அறிந்ததும் புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து ஓட்டுநர், பேருந்தை படு வேகமாக ஓட்டி வந்ததாக பயணிகள் சிலர் தெரிவித்தனர். இந்த வேகம்தான் விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications