மதம் மாறிய தலித்துகள்-இடஒதுக்கீடு கூடாது: பாஜக
திருச்சி: மதம் மாறிய தலித்துகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கூடாது என பாஜக கூறியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்த காங்கிரஸ் ஜோசியம் பார்த்து வருகிறது. பெரும்பாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவின் அடிப்படையில், வைத்துதான் தேர்தல் அறிவிப்பு இருக்கும்.
அநேகமாக ஏப்ரல் மாதத்தில் தான் மக்களவைத் தேர்தல் வரும்.
பாஜக அத்வானியை பிரதமராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளும். விலைவாசி உயர்வு, பயங்கரவாதம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடு போன்ற பிரச்சினைகளை மக்கள் முன் முன்னிருத்துவோம்.
தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதைவிட கூட்டணி அமைத்து போட்டியிட்டு 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளோம்.
அதற்கேற்ப தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். பூத் கமிட்டி அமைப்பதில் 43 சதவீதம் பணிகளை முடித்து விட்டோம்.
இன்று திருச்சியிலும் நாளை ராமநாதபுரத்திலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறேன்.
தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் தவிர அனைத்து கட்சிகளுடனும் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு செய்ய என் தலைமையில் 15 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி சேலத்தில் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழக அரசு ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் ரேஷன் அரிசி வழங்குவதால் பொது மக்களுக்கு பயன் இல்லை. கடத்தல் காரர்களுக்கு தான் போய் சேருகிறது. ரேஷன் அரிசியை கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டத்திற்கு அளிக்கலாம்.
அதே போன்று 50 ரூபாய்க்கு ரேஷன் கடையில் மளிகை பொருட்கள் என்பதும் தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.
இது போன்ற எத்தனை கவர்ச்சி திட்டம் அறிவித்தாலும் வரும் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.
தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி போனாலும் அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டும் என்று ரங்கநாதன் மிஸ்ரா அறிக்கை தந்துள்ளது.
இதை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்ட மசோதாவாக கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
எனவே மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று டெல்லியில் 21ம் தேதி பாஜக தாழ்த்தப்பட்டோர் அணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.
மேலும் இந்து ஹரிஜன மக்கள் மத்தியில் விழிப்புணர்வு யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவும் நிலையில் மின்கட்டணத்தை வசூலிக்க கெடுபிடி செய்கிறார்கள். மின் கட்டணத்தை செலுத்த கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications