ரஞ்சிதா கார் டிரைவர் தந்தை படுகொலை-3 பேர் கைது
சென்னை: சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் நடிகை ரஞ்சிதாவின் கார் டிரைவரின் தந்தை கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்குக் காரணமாக இருந்த சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சைதாப் பேட்டை, சடையப்பன் முதலி தெருவில் வசித்தவர் அருணகிரி (வயது 55). இவர், சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் மரக்கடை வைத்துள்ளார். குடிதண்ணீர் வியாபாரமும் செய்து வந்தார். இவரது மகன் பாலகிருஷ்ணன் நடிகை ரஞ்சிதாவிடம் கார் டிரைவராக உள்ளார்.
ரஞ்சிதா வெளியூர் சென்றுள்ளதால் 4 நாட்கள் பாலகிருஷ்ணனுக்கு ஓய்வு கொடுத்திருந்தார். இதனால் பாலகிருஷ்ணன் தனது வீட்டில் தங்கியிருந்து தந்தைக்கு உதவியாக தண்ணீர் வியாபாரத்தைக் கவனித்தார்.
நேற்று முன்தினம் இரவு வீடுகளுக்கு தண்ணீர் பாட்டில் சப்ளை செய்துவிட்டு, சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். குமரன் நகர் ரெட்டி குப்பம் ரோட்டில் வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் சைக்கிள் மீது மோதிவிட்டது. இதில் பாலகிருஷ்ணனின் சைக்கிள் சேதம் அடைந்தது.
உடனே பாலகிருஷ்ணனுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரசேகரன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு வரை போனது.
சேதமடைந்த தனது சைக்கிளை பழுதுபார்க்க பணம் வேண்டுமென்று சந்திரசேகரனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனே தனக்கு ஆதரவாக ஆட்களை திரட்டிவரும்படி பாலகிருஷ்ணன் செல்போனில் தனது தந்தை அருணகிரியிடம் கூறியுள்ளார். உடனே அருணகிரி சம்பவ இடத்திற்கு ஆட்களோடு ஓடிவந்தார். சந்திரசேகரனும் செல்போனில் தனது நண்பர்களிடம் பேசி உதவிக்கு அழைத்திருக்கிறார். சந்திரசேகரனின் நண்பர்கள் 5 பேரும் உதவிக்காக வந்தனர்.
கொலையில் முடிந்த மோதல்!
அதற்குள் பாலகிருஷ்ணனின் தந்தை தனது ஆதரவாளர்களுடன் வந்துவிட இரு தரப்பினரும் கடுமையாக மோதினராம்.
சந்திரசேகரனும், அவரது நண்பர்களும் சேர்ந்து பாலகிருஷ்ணனின் தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் கீழே விழுந்த அருணகிரிக்கு தலையின் பின்பக்கத்தில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு அருணகிரி இறந்து போனார்.
கைது!
இநது தொடர்பாக, துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் சேது ஆகியோர் மேற்பார்வையில், குமரன் நகர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அருணகிரியை கொலை செய்ததாக சந்திரசேகரன், அவரது நண்பர்கள் குவிந்தன் (23), பழனி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். குட்டி, நிர்மல், அன்பழகன் மேலும் 3 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நேற்று மாலை சரண் அடைந்தனர்.
கைதான மூவரில் குவிந்தன் சட்டக் கல்லூரி மாணவர். தகராறு ஆரம்பிக்கக் காரணமாக இருந்த சந்திரசேகரன் வானகரத்தில் சாயப் பட்டறை நடத்தி வருகிறார். கைதானவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications