சாத்தான்குளம் எஸ்ஐக்கு 4 மாதம் சிறை!
தூத்துக்குடி: அத்துமீறி நடந்து கொண்ட சாத்தான்குளம் போலீஸ் எஸ்ஐ குமரகுருபரனுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருளூரை சேர்ந்தவர் ஈசாக். இவர் தனது தோட்டத்தில் இருந்த மரத்தை சிலர் வெட்டி கடத்தியதாக சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார்.
எஸ்ஐ குமரகுருபரன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, பொன்னையா, பாலு ஆகியோரை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு சாத்தானகுளம் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. பொன்னையா, பாலுவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் பொன்னையா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணையின் போது எஸ்ஐ குமரகுருபரன் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ரகளை செய்தார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜோசப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அத்துமீறி நடந்து கொண்ட சாத்தான்குளம் எஸ்ஐ குமரகுருபரனுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.