அமைச்சர் வீராசாமி பெயரில் மிரட்டல் - புகார் கூறியவரின் வக்கீல் கைது
சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அடியாட்கள் மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்த நபரின் வழக்கறிஞரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகேசன். கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை வாங்கிய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரூ. 25 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை சந்திரசேகர் என்பவர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும், அவர் அனுப்பிய ஆட்கள் வீட்டில் வந்து சுற்றுச்சுவரை இடித்தும், மரங்களை வெட்டியும் மிரட்டியதாகவும், இதுகுறித்து தட்டிக் கேட்டபோது, அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உத்தரவுப்படி தாங்கள் வந்துள்ளதாக கூறி மிரட்டியதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் முருகேசன்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.
அதில், எனக்கும், இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு இந்த புகார் கூறப்பட்டுள்ளது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் இது. இதுகுறித்து முருகேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென முருகேசனின் வழக்கறிஞர் எழில் கைது செய்யப்பட்டார்.