போலீஸ் இன்பார்மர் வெட்டிக் கொலை-ரவுடிகள் வெறி
கும்பகோணம்: கும்பகோணத்தில் போலீஸ் இன்பார்மர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ரவுடிகள் சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள உள்ளூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி, பிளம்பர். இவரது மனைவி ஜென்னத். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
கும்பகோணம் நகரில் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை பற்றியும், ரவுடிகள் பற்றியும் போலீஸூக்கு அவ்வப்போது ரகசியமாக தகவல் கொடுத்து போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்தார்.
அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் போலீஸார் பல ரவுடிகளை பிடித்துள்ளனர். இது ரவுடிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களை பற்றி யார் தகவல் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் விசாரித்தபோது ஜெகபர் அலிதான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ரவுடிகள் சிலர், ஜெகபர் அலியை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஜெகபர் அலி தனது பணியை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் சிலர் நேற்று ஜெகபர் அலியின் வீட்டுக்கு சென்றனர். ஏதோ கூறி அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
பல மணி நேரமாகியும் ஜெகபர் அலி வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பதறினர். இந்த நிலையில் செட்டி மண்டபம் அருகே காவிரி ஆற்றில் ஒரு வாலிபர் தலை, கழுத்து, கை போன்ற இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அது ஜெகபர் அலி என்பது தெரிய வந்தது.
ஜெகபர் அலி போலீஸாருக்கு தகவல் கொடுப்பதால் ஆத்திரமடைந்த ரவுடிகள் சிலர் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.