கர்நாடகாவில் சர்ச்கள் மீது மீண்டும் தாக்குதல்-பதட்டம்
மங்களூர்: கர்நாடகாவின் சிக்மகளூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்க கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பஜ்ரங் தள் உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் தேவாலயங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கிறிஸ்தவர்கள் இந்து ஆலயங்கள் முன்பு கூடி மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மீண்டும் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள உஜிர் என்ற இடத்தில் உள்ள சர்ச்க்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த கிறிஸ்தவ மத புத்தகங்களை தீ வைத்துக் கொளுத்தினர்.
தரை விரிப்புகள் மீது மண்ணெண்ணையை ஊற்றினர். நாற்காலிகள் மற்றும் மேஜைகளையும் அடித்து சேதப்படுத்தின.
கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த மாதா சிலையையும் சில மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தேவாலயத்துக்குள் கற்களை வீசினர். இதனால் இந்த பகுதிகளில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து அமைதி நிலவுவதாக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்தார். தேவாலயங்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்க மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.