அமெரிக்கன் கல்லூரியில் வகுப்பறைகள் திறப்பு-பதட்டம் நீடிப்பு!
மதுரை: முதல்வர் பதவி தொடர்பான சிக்கலில் தவித்து வரும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேற்று வகுப்பறைகள் திறக்கப்பட்டு இளங்கலை வகுப்புகள் தொடங்கின. இருப்பினும் ஒருதரப்பு மாணவர்கள் கோஷமிட்டபடி மாணவர்களை வெளியேறுமாறு கூறியதால் தொடர்ந்து அங்கு பதட்டம் நீடித்து வருகிறது.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னராஜ் ஜோசப்புக்குப் பதில், ஜார்ஜ் செல்வகுமார், பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் புதிய முதல்வராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்கன் கல்லூரியில் பெரும் மோதல் வெடித்தது. கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது. கல்லூரிக்குள் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சின்னராஜ் ஜோசப்பின் ஆதரவு ஆசிரியர்கள் வகுப்புகளைத் தொடங்கினர். ஆனால் வகுப்பறைகள் திறக்கப்படவில்லை.இதையடுத்து மரத்தடிகளில் வகுப்புகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று பிஷப் தரப்பு நியமித்த முதல்வர் செல்வக்குமார் ஆதரவு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். வகுப்பறைகள் திறக்கப்பட்டு, இளங்கலை வகுப்புகள் தொடங்கின.
இதையொட்டி ஏராளமான மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.
பாடம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் மாணவர்களை வெளியேறும்படி தெரிவித்தனர். மைக்கில் கோஷங்களை எழுப்பியபடி சென்ற மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் கல்லூரி வளாகத்தில் போலீஸார் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொறுப்பு முதல்வரான ஜார்ஜ் செல்வகுமார், பர்சாராக செயல்பட்ட தவமணி கிறிஸ்டோபர், தேர்வாணையர் அலெக்சாண்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செப்டம்பர் 10ம் தேதி முதுகலை பட்ட வகுப்புகளும், நேற்று இளங்கலை பட்ட வகுப்புகளும் திறக்கப்பட்டன. ரெகுலர் மாணவர்கள் ஆயிரத்து 700 பேரில் ஆயிரத்து 300 பேர் வந்துவிட்டனர்.
ஆசிரியர்கள் 107 பேரில் 55 பேர் வந்தனர். 39 பேர் ஆப்சென்ட் ஆகினர். 5 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அலுவலர்கள் 74 பேரில் 38 பேர் வந்திருந்தனர். சிலர் சூழ்ச்சி செய்து வகுப்பு நடத்த இடையூறு செய்கின்றனர்.
நேற்று வகுப்புக்கு செல்லாத ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் கண்காணிப்பு காமிராவை உடைத்துள்ளனர். தமிழக அரசு, கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் கல்லூரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்டம்பர் 22ம் தேதி நிர்வாக கவுன்சில் மீண்டும் கூட உள்ளது. சின்னராஜ் ஜோசப் அங்கு ஆஜராக வாய்ப்பு தருவோம் என்றனர்.
முதல்வர் சின்னராஜ் ஜோசப் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயர்நீதிமன்றம் என்னை கல்லூரி விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றாலும், நான் தற்போதும் முதல்வராகத்தான் உள்ளேன்.
நான் எனது பொறுப்பை துணைமுதல்வர் அன்புதுரையிடம் தான் கொடுத்து விட்டு வந்தேன். அவர் தான் கல்லூரியை நிர்வகிக்க வேண்டும். இதற்கு அரசும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
கல்லூரியில் நடந்த வன்முறை குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும். கல்லூரி நிலை குறித்து ஆராய அரசு குழு அமைக்க வேண்டும் என்றார்.