ஏமன்: அமெரிக்க தூதரகம் மீது கார் குண்டு தாக்குதல்-20 பேர் பலி
சானா: ஏமன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய நர்ஸ் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஏமன் தலைநகர் சானா நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதவிட்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அந்த கார் வெடித்து சிதறியது. அதைத் தொடர்ந்து சரமாரியாக ராக்கெட்டுகளை வீச தாக்கியும், துப்பாக்கி சூடு நடத்தியும் பயங்கர தாக்குதலை நடத்தினர்.
இதில் ஏமன் ராணுவ வீரர்கள் 6 பேர், பொது மக்கள் 8 பேர், மற்றும் 6 தீவிரவாதிகள் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்த பெண் நர்ஸ் ராணி கிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்துள்ளது.
அவரது தாயும் ஏமனில் நர்ஸாக பணியாற்றுகிறார். மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணி பலியாகியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஜிகாத் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 6 மாதங்களில் ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்தும் 2வது தாக்குதலாகும். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தூதரகத்துக்கு அருகில் இருந்த குடியிருப்புகளும் பலத்து சேதமடைந்துள்ளது.
தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.