இடைத் தேர்தல் வன்முறை-சரத் கட்சி தொண்டர் கொலை
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ளாட்சி இடைத்தேர்தல் மோதலில் சரத்குமார் கட்சி தொண்டர் சராமரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கிள்ளியூர் தொகுதிகுட்பட்ட திப்பிறமலை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அருள்ராஜ், ராமதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அருள்ராஜூக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியினர் தேர்தல் வேலைகளை செய்தனர். ராமதாசுக்கு ஆதரவாக பாஜகவினர் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.
அருள்ராஜ் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். கண்ணன் விளையை சேர்ந்த ச.ம.க. தொண்டர் கோபு என்பவரும் அவருடன் சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அருள்மணி, தினேஷ், மகேஷ் ஆகிய 3 பேரும் பைக்கில் வந்து கோபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபுவை கருங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் ஆச்சாரி பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். இரவில் அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் பாளை அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் இறந்தார்.
சரத்குமார் கண்டனம்:
இந் நிலையில் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வன்முறைகள் மூலம் எங்கள் கட்சியின் நிர்வாகிகளை மிரட்ட முடியாது. எந்த சலசலப்பையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் திப்பிறமலை பஞ்சாயத்து 2வது வார்டில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அருள் ராஜுக்கு வாக்கு சேகரித்த போது கோபு என்ற தொண்டரை வெட்டி சாய்த்துள்ளனர். அருள்மணி, மகேஷ், தினேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கோபுவை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தேர்தல் தகராறு அல்ல, முன்விரோதம் என்று காவல் துறை பொய்யான தகவல்களை கூறி குற்றவாளிகளை தப்பிக்க உதவுவதாக தெரிகிறது.
இடைத்தேர்தல் காலங்களில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடப்பது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அராஜகத்தினால் உள்ளாட்சி இடைத் தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கட்சியின் சார்பில் உத்தரவிட்டிருந்தோம். ஆனாலும், ஆர்வம் மிகுதியால் ஒரு சில இடங்களில் கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
கோபுவை கொலை செய்த உண்மை யான குற்றவாளிகளை கைது செய்யாவிடில் நாகர்கோவிலில் எனது தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மீளாத்துயரில் தவிக்கும் கோபுவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கோபுவின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் ரூ.50,000 நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications