ரூ.1 அரிசி-அவதூறு பரப்பினால் நடவடிக்கை: வீரபாண்டியார்
சேலம்: தமிழக அரசு வழங்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் குறித்து அவதூறாக செய்தி பரப்பினாலோ அல்லது அரிசியில் வண்டு இருக்கிறது என்று தவறாக செய்தி பரப்பினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.
சேலத்தை அடுத்த அமானி கொண்டலாம்பட்டியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கபப்ட்டு திமுகவில் இணைந்த செல்வகணபதி அரிசிப் பைகளை அமைச்சருக்கு எடுத்துக் கொடுக்க அவர் அதை நுகர்வோருக்கு விநியோகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், 17-ந் தேதி ஓமலூர் அருகே நல்லாக்கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சிலர் அங்கு வந்து ரேஷன் கடை ஊழியர்களிடம் அரிசி தரமற்று இருப்பதாகவும், அரிசியில் கல், மண் மற்றும் வண்டு இருப்பதாகவும் கூறி தகராறு செய்துள்ளனர்.
அப்போது ரேஷன் கடை ஊழியர்கள் அதனை மறுத்து உள்ளனர். இந்த பிரச்சினை காரணமாக நெருக்கடி ஏற்பட்டு, மக்களுக்கு வழங்க வைத்திருந்த அரிசி கீழே கொட்டி இருக்கிறது. கீழே இருந்து அந்த அரிசியை எடுத்து அதில் மண் கலந்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதுபற்றி என் கவனத்துக்கு கொண்டு வந்ததும், நான் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். அப்போது அவர்கள், ஒரு ரூபாய் திட்டத்தில் நல்ல தரமான அரிசி வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தனர். மேலும் மாதிரி அரிசியையும் காண்பித்தார்கள்.
மேலும் நல்லாக்கவுண்டம்பட்டியில் அரிசி வாங்கி புகார் கூறியதாக தெரிவித்த கோவிந்தம்மாள் என்ற பெண்ணை விசாரித்தபோது, அவரும், தரமான அரிசிதான் வழங்கினார்கள் என்று தெரிவித்துள்ளார். (கோவிந்தம்மாளையும் செய்தியாளர்களிடம் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்)
நல்லாக்கவுண்டம்பட்டியில் வந்து பிரச்சினை செய்தவர்கள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வினர் என்று எனக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதேபோல் கொண்டப்பநாயக்கன்பட்டியிலும் தரமான அரிசி வழங்கப்படவில்லை என்று தே.மு.தி.க.வினர் புகார் கூறி திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். விசாரித்ததில் அங்கும் நல்ல தரமான அரிசிதான் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்துக்கு களங்கம் கற்பிக்க வேண்டும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சிகள் செய்து வருகிறார்கள். இதுபோன்று தவறான தகவலை பரப்பி அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications