லஞ்சம்-ஆர்டிஓ அலுவலக பெண் ஊழியர் கைது
சென்னை: புரோக்கர் மூலம் லஞ்சம் வாங்கிய சென்னை ஆர்டிஓ அலுவலக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மந்தவெளியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஞானபிரகாசம், மேக்சி கேப் வாகனம் வாங்கினார். அதனை திருவான்மியூர் வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ. அலுவலகம்) பதிவு செய்யச் சென்றார்.
ஆனால், வாகனத்தை பதிவு செய்யாமல் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் இழுத்தடித்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் ராஜலட்சுமியை சந்தித்து பேசினார் ஞானபிரகாசம்.
அப்போது வாகனத்தை பதிவு செய்ய ரூ. 600 லஞ்சம் கேட்டார் ராஜலட்சுமி. இது குறித்து ஞானபிரகாசம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ராஜலட்சுமியை கையும் களவுமாய் பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
போலீசாரின் ஆலோசனைப்படி ஞானப்பிரகாசம் ரூ. 600 பணத்தை கொடுக்கச் சென்றார். ஆனால் அலுவலகத்தில் ராஜலட்சுமி இல்லை.
இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டார் ஞானபிரகாசம்.
அப்போது ராஜலட்சுமி, நான் வெளியில் இருக்கிறேன். அலுவலக வளாகத்தில் சார்லஸ் சிரில் என்ற புரோக்கர் இருப்பார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சார்லஸ் சிரிலிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்லஸ் சிரிலை பிடித்தனர்.
இந்தக் தகவல் அறிந்த ராஜலட்சுமி சில நாட்களாக அலுவலகத்துக்கே வரவில்லை. இதையடுத்து வில்லிவாக்கம் தணிகை தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை சென்ற போலீசார் ராஜலட்சுமியை கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications