அண்ணா நூற்றாண்டில் வெளியே- வழக்கில் உள்ளே!
மதுரை: அண்ணா நூற்றாண்டையொட்டி தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி ஒருவர், மற்றொரு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டையொட்டி தமிழக அரசு 1,405 சிறைக் கைதிகளை சமீபத்தில் விடுதலை செய்தது. அவர்களில் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (40) என்பவரும் ஒருவர்.
கடந்த 1997-ம் ஆண்டு இரண்டு பேரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், வேல்முருகன் பாளையங்கோட்டை சிறையில் இருந்து திங்கட்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 1991-ம் ஆண்டு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் நீதி மன்ற வளாகத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 16 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் வேல்முருகனும் ஒருவர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதி மன்ற டிவிஷன் பெஞ்ச் கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
மேலும், வேல்முருகன் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், 14 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பின்பே அவர் தண்டனை குறைப்புக்கு தகுதி உள்ளவர் ஆவார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து மதுரை மத்திய சிறையில் வேல்முருகன் மீண்டும் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications