சீனா: இரவு விடுதியில் பெரும் தீவிபத்து - 43 பேர் பலி
பெய்ஜிங்: தெற்கு சீனாவில் உள்ள இரவு கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 88 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹாங்காங் - சீனா எல்லையில் உள்ள குவாங்டாங் மாகாணம் ஷென்சென் பகுதியில் இரவு விடுதி உள்ளது. இந்த கிளப்பில் நேற்று இரவு கேளிக்கை விருந்தில் பலர் பங்கேற்றனர். அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி 43 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 88 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிளப்பின் மூன்றாவது தளத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், அதனால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். தீவிபத்து ஏற்பட்ட உடன் தப்பிப்பதற்காக முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள கிளப், பார், தியேட்டர் போன்ற பொது இடங்களில் பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பல விபத்துகள் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 2000ம் ஆண்டு நைட்கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 309 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.