பெங்களூரில் 3 சர்ச்கள் தாக்கப்பட்டன - பதட்டம்

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக சர்ச்சுகள் மீதும், கிருஸ்துவர்கள் மீதும் பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலக்கு பஜ்ரங் தள் முழுப் பொறுப்பேற்றபோதும் அதன் மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இதையடுத்து மத்திய அரசு அரசியல் சட்டம் 355வது பிரிவின் கீழ் கர்நாடகத்துக்கு இரு முறை எச்சரிக்கை விடுத்தது. கிருஸ்துவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அடுத்தபடியாக 356வது பிரிவின் கீழ் நடவடிக்கை (மாநில அரசைக் கலைப்பது) எடுக்கப்படலாம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு மகேந்திர குமாரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நீதி விசாரணை நடத்த மறுத்து வந்த முதல்வர் எதியூரப்பா, திடீரென 'யு டர்ன்' அடித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பஜ்ரங் தள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏதும் பேசாமல், மதமாற்றத்தில் கிருஸ்துவ அமைப்புகள் ஈடுபட்டு வருவதால் தான் இந்தத் தாக்குதல்கள் நடப்பதாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் எதியூரப்பாவும் உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மத்திய அரசின் கடும் எச்சரிக்கையால் மகேந்திர குமாரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடகத்தில் அமைந்த முதல் பாஜக ஆட்சியில் மற்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை பஜ்ரங் தள் அமைப்புக்கு முதல்வர் தரவில்லை என்றும், இதனால் தான் இந்தத் தாக்குதல்களில் அந்த அமைப்பு ஈடுபட்டு தனது அதிருப்தியை இந்த வழியில் காட்டியதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில், மகேந்திர குமாரின் கைதுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள பஜ்ரங் தளத்தினர் இன்று பெங்களூரில் தாக்குதலை விஸ்தரித்துள்ளனர்.
ராஜராஜேஸ்வரி நகர், மரியன்னபாளையா மற்றும் பனஸ்வாடி ஆகிய இடங்களில் உள்ள 3 சர்ச்சுகளுக்குள் புகுந்த பஜ்ரங் தளத்தினர் அங்கு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் தாக்குதல் நடத்தியவர்களை அடித்து விரட்டினர். சிலர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தாக்குதலுக்குள்ளான சர்ச்சுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் நடந்த வந்த தாக்குதல்கள் தற்போது பெங்களூருக்கும் பரவியுள்ளதால் பாஜக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இயேசு சிலை உடைப்பு:
ராஜராஜேஸ்வரி நகர் சர்ச்சுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த இயேசு நாதர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மரியன்னபாளையா சர்ச்சுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த உண்டியல் பெட்டியை உடைத்துள்ளது. கல்வீச்சிலும் இறங்கியது.
சம்பவ இடங்களை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பித்ரி நேரில் சென்று பார்வையிட்டார்.
முதல்வர் அவசர கூட்டம்:
பெங்களூரிலும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் நடந்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் எதியூரப்பா, உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அப்போது அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications