மன்மோகனின் யு.எஸ், பிரான்ஸ் பயணம் - நாளை தொடக்கம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் 10 நாள் அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் பயணமாக நாளை டெல்லியிலிருந்து கிளம்புகிறார்.
அணு சக்தி ஒத்துழைப்பு மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் செல்கிறார்.
நியூயார்க்கில் 26ம் தேதி நடைபெறும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பேசுகிறார். 29ம் தேதி மார்ஷெல் நகரில் நடைபெறும் இந்திய - ஐரோப்பிய யூனியன்மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
புஷ்ஷுடன் 25ம் தேதி சந்திப்பு
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை செப்டம்பர் 25ம் தேதி அவர் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. 26ம் தேதியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைகிறது. அதற்குள் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை கிடைத்து விட்டால் பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போதே அவரும், புஷ்ஷும் ஒப்பந்தத்தில் இறுதி கையெழுத்திடுவார்கள் என தெரிகிறது.