டெல்லி குண்டுவெடிப்பு: மேலும் 3 தீவிரவாதிகள் கைது
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளில் 3 பேர் இன்று போலீஸாரிடம் சிக்கினர். மேலும், டெல்லி குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாதான் முக்கிய காரணம் எனவும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 13ம் தேதி நடந்த டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக குஜராத் போலீஸார் அபு பாஷர் என்ற முக்கிய தீவிரவாதியைக் கைது செய்தனர். இந்தக் கைதின் மூலம்டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான துப்பு துலங்கியது.
பாஷரை டெல்லிக்குக் கொண்டு வந்து போலீஸார் தீவிரமாக விசாரித்ததில் அவர் டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியருந்த தீவிரவாதிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
இதில் அதிப் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சைஃப் மட்டும் சிக்கினார். 2 பேர் தப்பினர். தப்பியவர்களில் ஜீஷான் என்பவர் நேற்று காலை போலீஸ் வசம் சிக்கினார். இதையடுத்து மீதமுள்ள தீவிரவாதிகளையும் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளில் ஜியா, ஷகீல், ஜாகிர் உர் ரஹ்மான் ஆகிய 3 பேர் தெற்கு டெல்லியில் இன்று காலை போலீஸாரிடம் பிடிபட்டனர்.
இவர்களில் ஜியாவுக்கும், ஷகீலுக்கும் ஜூலை 26ம் தேதி நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்பு உண்டு என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்திய குழுவிலும் இவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் கைதுடன் சேர்த்து மொத்தம் கைதான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 6 பேர் வெளியில் பதுங்கியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
லஷ்கருக்கு தொடர்பு:
இதற்கிடையே, டெல்லி குண்டுவெடிப்புக்கு லஷ்கர் இ தொய்பாவின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சதிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய இரு அமைப்புகளையும் லஷ்கர்தான் வழி நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்புக்கு மூளையான அதீப், அல் கொய்தாவின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் அதீப் முக்கிய பங்கு வகித்து வந்தார். அல் கொய்தா, ஓசாமா பின்லேடன் மீது அவருக்கு அதிக பாசம் உண்டு.
சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீனுக்கு லஷ்கர்தான் அனைத்து உதவிகளையும், அறிவுரைகளையும் செய்து வருகிறது.
அதீப்பின் லேப்டாப்பும் போலீஸ் வசம் சிக்கியுள்ளது. அதில் அல் கொய்தா குறித்தும், லேடன் குறித்தும் நிறைய தகவல்கள் பதிவாகியுள்ளது. அல் கொய்தாவுக்கும், அதீபுக்கும் நேரடித் தொடர்பு இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
உ.பி.யில் குண்டு வைத்த சைஃப்:
இந்தக் கைதின் மூலம் உ.பி. கோர்ட் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் துப்பு துலங்கியுள்ளது.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் வாரணாசி கோர்ட்டில் குண்டுவைத்தது சைஃப் என்று தெரிய வந்துள்ளது. இவருடன் சஜீத் என்பவரும் சேர்ந்துதான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த வெடிகுண்டுகளுக்கான மூலப் பொருட்களை கர்நாடகத்திலிருந்து இவர்கள் கொண்டு வந்துள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.