நானே முதல்வராக ரெடி-கார்த்திக்
வள்ளியூர்: நான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்று நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.
நெல்லை வந்த அவர், நாங்குநேரி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேவர் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக அகிம்சை வழியில் நாம் போராட வேண்டும். இங்கு சிலையை அவமதித்ததாக தகவல் அறிந்தவுடன் இங்கு வர நினைத்தேன். சில வேலைகள் காரணமாக உடனே வர முடியவில்லை.
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே வந்து விடுவேன். தோள் கொடுப்பேன். உங்களோடுதான் நான் இருப்பேன். சிலர் தற்போது கட்சி ஆரம்பித்து விட்டு முதல்வராகி விடுவேன் என்று கூறி வருகின்றனர். அப்படி நினைக்க கூடாது. முதல்வர் பதவி என்பது பெரிய ஸ்தானத்தில் உள்ளது. அதில் பல தலைவர்கள் தலைவிகள் அமர்ந்துள்ளனர்.
நான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். நாம் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களில்தான் ஈடுபடவேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications