நர்சிங் கவுன்சில்-பதிவு செய்ய குவிந்த நர்சுகள்!
சென்னை: சென்னையில் உள்ள நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான நர்சுகள் குவிந்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. அவர்களை ஊழியர்களும், போலீஸாரும் போராடி ஒழுங்குபடுத்தினர்.
தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அலுவலகம் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் மாளிகையில் இயங்கி வருகிறது. நர்சிங் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, டிப்ளமா படிப்பு முடிப்பவர்கள் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால்தான் அவர்களின் கல்வித் தகுதி அங்கீகரிக்கப்படும்.
தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்களும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2,500 பேர் பிஎஸ்சி, எம்எஸ்சி நர்சிங் பட்டம் பெற்றனர். கடந்த 20ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர்கள் பட்டம் பெற்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் உள்ள நர்சிங் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பட்டம் வாங்கிய நர்சுகள் குறிப்பாக, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பட்டம் பெற்ற உடன் சான்றிதழை பதிவு செய்வதற்காக நர்சிங் கவுன்சிலில் நேற்று குவிந்தனர்.
அவர்களோடு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பதிவு செய்ய நேற்று குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.
வழக்கமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வருவோரால் அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையில் நர்சுகளும் குவிந்து விட்டதால் நெரிசல் அதிகமானது. இதனால் அருகில் உள்ள சாந்தோம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நர்சிங் கவுன்சில் ஊழியர்களும், போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஜோஸ்பின் கூறுகையில், முதலில் பதிவு செய்தால்தான் சீனியாரிட்டி கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துவிட்டார்கள்.
நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வதற்கும் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் சம்பந்தம் இல்லை. வேலை வாய்ப்பு சீனியாரிட்டி பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாக பதிவு செய்ய வேண்டும்.
எனவே, அங்கீகாரம் பெறுவதற்கு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய அவசரப்பட வேண்டியதில்லை. போதிய கால அவகாசம் இருக்கிறது. எனவே, நிதானமாக பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications