கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேசுவோம்: தா.பாண்டியன்
தேனி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து, திமுக, காங்கிரஸ், பாஜகவைத் தவிர்த்து அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் பேசுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களை தா.பாண்டியன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, திமுக ஆகிய கட்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் அமைக்கக் கூடிய கூட்டணியை முறியடிக்கக் கூடிய வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
அனைத்துக் கட்சியுடனும் என்று கூறுவதில் அதிமுகவும் அடங்கும். கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கட்டாயம் சந்தித்துப் பேசுவோம்.
திமுகவுடன் அரசியல் உறவு முறிந்து விட்டது. நாங்கள் முறித்தது கால் பகுதி என்றால் அவர்கள் முறித்தது முக்கால்பகுதி என்றால் மிகையில்லை.
தமிழ்நாட்டில் தேமுதிகவும் ஒரு முக்கிய சக்திதான். எனவே அவரை வரதராஜன் சந்தித்துப் பேசியதில் தவறில்லை. அவருடனும் பேசலாம்.
டாக்டர் ராமதாஸுடனும் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம். அப்போது அவர் காங்கிரஸ் அணியில் இருப்பதாக கூறினால், அவருக்கு நன்றி, வணக்கம் என்று கூறி விடுவோம் என்றார் தா.பாண்டியன்.