இலவச சைக்கிள்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
சுரண்டை: தங்கள் குழந்தைகளுக்கும் அரசின் இலவச சைக்கிளை தர வேண்டும் என்று கூறி ஆதி திராவிட சமூக மாணவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை அருகே சேர்ந்தமரம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. விழாவில் கலந்து கொள்ள முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். 230 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதே பள்ளியில் பயிலும் 6 ஆதி திராவிட மாணவிகளின் பெற்றோர்கள் திடீரென்று தலைமை ஆசிரியையை முற்றுகையி்ட்டனர். தங்கள் குழந்தைகளுக்கும் சைக்கிள் வழங்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு 230 சைக்கிள்தான் வந்துள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு ஆதி திராவிர நலத்துறை மூலம் இன்னும் 6 சைக்கிள் வரவேண்டியுள்ளது. வந்தவுடன் கண்டிப்பாக வழங்கப்படும் என்று தலைமை ஆசிரியை கூறினார். அதை ஏற்க மறுத்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சைக்கிள் வழங்காமல் விழாவை நடத்தக் கூடாது என்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். எனினும் சைக்கிள் வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது.