நகராட்சி கலைப்பு நோட்டீஸ்: சின்னமனூர் கவுன்சிலர்கள் பெற மறுப்பு
தேனி: சின்னமனூர் நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது என்று கேட்டு தமிழக அரசு அனுப்பியுள்ள நோட்டீஸை ஏற்க முடியாது என நகராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நகராட்சித் தலைவர் அரசின் முடிவை ஏற்பதாக ெதரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி திமுக தலைவர் தமிழ்ச்செல்வி மீது கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து, கவுன்சிலர்களின் கமிஷன் ஒப்பந்தத்தை தான் ஏற்காததால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார் தமிழ்ச்செல்வி.
இது தொடர்பாக கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி தலைவரிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க அரசு வக்கீலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த விசாரணையும், தலைவர் மீது கவுன்சிலர்கள் அளித்த நம்பிக்கை இல்லா தீர்மான மனு மீதான விசாரணையும் 24.9.2008 (நேற்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் முத்துக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சிக்கு வந்தனர். அப்போது, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விசாரணை கூட்டம் அக்டோபர் 20ம் தேதி நடத்தப்படும் என்று மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.
இதற்கிடையில் நகராட்சியை கலைக்க விளக்கம் கேட்டு தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்களுக்கு கொடுத்து அனுப்பினார். ஆனால் அதை வாங்க கவுன்சிலர்கள் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து தலைவர் தமிழ்ச்செல்வி கூறுகையில், தவறான ஒப்பந்தம்போட்டு கையெழுத்திட கவுன்சிலர்கள் கேட்டதால் மறுத்து விட்டேன். இதனால் என் மீது வீண் பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்தி பதவியை பறிக்க கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கவே நீதிமன்றம் சென்றேன். அரசுக்கும் நகராட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications