அணு ஒப்பந்தம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தள்ளிவைப்பு
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை புஷ் பதவிக்காலம் முடிவதற்குள் நிறைவேற்றி விட வேண்டும் என புஷ் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்கு செனட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.
இந்தப் பின்னணியில் இன்று அதிகாலை பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், அணு சக்தி ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக்வில் கூறுகையில், நாளை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம். நாளை காலை (அமெரிக்க நேரப்படி) ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றார்.
இருப்பினும் நாளைக்குள் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பதில் இந்தியா இன்னும் சந்தேகத்துடனேயே உள்ளது.
முன்னதாக அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பாக இருந்து வரும் ஹோவர்ட் பெர்மான், ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அந்த தனி நபர் மசோதாவில் ஈரானுடன், இந்தியாவை ஒப்புமைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து இந்தியத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக அந்த மசோதாவை பின்னர் பெர்மான் திரும்பப் பெற்றார்.
இவர்தான், புஷ் நிர்வாகம், அமெரிக்க செனட் கமிட்டிக்கு எழுதிய கடித விவரங்களை வெளியிட்டு இந்தியாவில் புயலைக் கிளப்பியவர் என்பது நினைவிருக்கலாம்.
அணு ஒப்பந்தத்தின் மீது செனட் சபையிலும் வாக்கெடுப்பு இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வரை (இந்திய நேரப்படி இன்றிரவு வரை) வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.