அகமதாபாத், பெங்களூர், டெல்லி, சூரத்தில் குண்டுவைத்தது 3 முஜாஹிதீன் பிரிவுகள்!
மும்பை: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பிரிவுகள்தான் டெல்லி, பெங்களூர், அகமதாபாத், சூரத் ஆகிய நகரங்களில் வெடிகுண்டுகளை வைத்தது என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், மொத்த குண்டுவெடிப்பு சதியையும் ஒரே ஒரு நபர்தான் தீட்டியுள்ளார். அதை 3 பிரிவுகளாக பிரிந்து இந்தியன் முஜாஹிதீன் செய்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் ஆறு பேர் வரை இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பிரிவுக்கும் 3 இடங்களில் குண்டு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு ஆகஸ்ட் 24ம் தேதி நடந்தது. அடுத்த நாள் அகமதாபாத்தில் நடந்தது. சூரத்தில் வைத்த குண்டுகள் டிஜிட்டல் டைமர் செய்லபடாததால் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை நிறுவியவரான ரோஷன் கான் என்கிற ரியாஸ் பத்கல்தான் இதற்குத் தேவையான பணத்தை ஹவாலா மூலம் ஏற்பாடு செய்து தந்துள்ளார். வாகனங்களையும், வெடிகுண்டுகளையும் அவர்தான் ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மும்பை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்த 5 பேர்களில் ஒருவரான முகம்மது சாதிக் ஷேக், ஆயுதப் பயிற்சிக்கு ஆட்களைத் திரட்டி கொடுத்துள்ளார்.
வெடிகுண்டுச் சம்பவங்கள் குறித்து தொலைக்காட்சி சானல்களுக்கு இமெயில் அனுப்பியதற்குக் காரணம் தங்களது அமைப்புக்கு விளம்பரம் தேடித் கொள்வதற்காகவே.
கடந்த 2005ம் ஆண்டு முதலே பல்வேறு நகரங்களில் இந்தியன் முஜாஹிதீன் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வந்துள்ளது. ஆனால் பெங்களூர் குண்டுவெடிப்புக்குப் பின்னர்தான் இவர்கள் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications