ஐயா-அம்மா போதும்..அண்ணனுக்கு வாய்ப்பு: பிரேமதலா
சென்னையில் நடந்த தேமுதிகவின் மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி மகள் ராஜலட்சுமி-யுவராஜ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதா பேசியதாவது:
நமது சுவர் விளம்பரங்களை அழிப்பது போன்ற காரியங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். நம்மோடு போட்டிப்போட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் வன்முறை ஈடுபடுவதைவிட தர்ம காரியங்கள் செய்வதில் போட்டிப் போடலாமே?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் தொண்டர்களை ராணுவ கட்டுக்கோப்போடு வைத்துள்ளார். தன் சொந்த செலவில் ரூ.1.50 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை திறந்துள்ளார்.
தனித்து போட்டி: சவால்...
முதல்வர் கருணாநிதி 5வது முறையாக முதல்வராக இருப்பதாக கூறுகிறார். நல்ல திட்டங்களை வாரி வழங்குகிறோம், ரூபாய்க்கு கிலோ அரிசி தருகிறோம் என்றார். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் போதுமா. மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளதே. திமுக தலைவர் கருணாநிதி வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவரா?
ஆளுகின்ற கட்சியும், ஆண்ட கட்சியும் தேர்தல் நேரங்களில் உங்களைத் தேடி வந்து நோட்டுகளை வழங்கி ஓட்டு வாங்க வருவார்கள். நீங்கள் அம்மாவையும் பார்த்து விட்டீர்கள். ஐயாவையும் பார்த்து விட்டீர்கள். அண்ணனுக்கு (விஜயகாந்த்) ஒரு முறை வாய்ப்பு கொடுத்து தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
விருத்தாச்சலம் தொகுதியில் நம் தலைவர் தன் சொந்த செலவில் பல நலத்திட்ட உதவிகளை தொகுதி மக்கள் வியப்படையும் வகையில் செய்துள்ளார். அதேபோல் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னையை தேமுதிக நிச்சயம் கைப்பற்றும்.
கடந்த 2 தினங்களுக்கு முன் லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தேமுதிகவுக்கு 3வது இடம் என்று கூறியுள்ளது. மக்கள் மனதில் எப்போதும் தேமுதிகவிற்குதான் முதலிடம். அதனை இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை என்றார்.