என் ஆட்சியில் மதக் கலவரமே இல்லை-ஜெ
சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் மதக்கலவரமோ, இனக் கலவரமோ நடைபெற்றதில்லை என்றும் சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக தான் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்தார் விருந்து அளித்தார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, அவரது மனைவி, தலைமை காஜி உள்பட ஏராளமான முஸ்லீம் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜெயலலிதா பேசுகையில், பல ஆண்டுகளாக முஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து அளித்து வருகிறேன். இந்த விருந்துக்கு தவறாமல் வந்து கலந்து கொண்டு என்னை பெருமைபடுத்தும் முஸ்லீம் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் எல்லா மதத்தைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையுடனும், சகோதர பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்தவிதமான மதக்கலவரமும் நடந்ததில்லை.
தற்போதும், பல மாநிலங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றாலும், தமிழகத்தில் மத நல்லிணக்கத்தோடும், ஒற்றுமையோடும் மக்கள் வாழ்கின்றனர்.
சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக நான் இருப்பேன். என் மீது முஸ்லீம் சமுதாயத்தினர் காட்டும் அன்பும், பாசமும் தொடர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.