வெள்ளம்- படகில் பிரசவித்த ஒரிஸ்ஸா பெண்
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் கேந்த்ரபாரா என்ற இடத்தில், வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு படகிலேயே பிரசவம் நடந்து குழந்தை பிற்தது.
பஸ்ஸில், ஓடும் ரயிலில் குழந்தை பிறக்கும் செய்திகள் சகஜமானது. ஆனால் ஒரிஸ்ஸா மாநிலம் கேந்த்ரபாராவைச் சேர்ந்த ரீட்டாவுக்கு நடந்த பிரசவம் அப்பகுதியினரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது. காரணம், வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கும் நீருக்கு நடுவே, படகில் அவருக்கு பிரசவம் நடந்தததான்.
கேந்த்ரபாரா அருகே உள்ள பேதாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா. கர்ப்பிணியாக இருந்தார். இப்பகுதியில் தொடர்ந்து இருந்து வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரசவ வலி அதிகமாகவே, படகு ஒன்றில் அவரை ஏற்றி மாவட்ட அரசு மருத்துவனைக்குக் கொண்டு ெசன்றனர். ஆனால் வழியிலேயே ரீட்டாவுக்கு பிரசவம் நடந்து விட்டது.
ரீட்டாவுடன் படகில் பயணித்த சில பெண்கள் சுற்றி நின்று கொள்ள, மறைப்பு ஏற்படுத்தப்பட்டு ரீட்டாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. வெள்ள நீருக்கு மத்தியில், ஓடும் படகில் அழகிய குழந்தையை ஈன்றார் ரீட்டா.
ஒரிசாவை தற்போது கன மழையும், வெள்ளமும் புரட்டிப் போட்டு வருகிறது. ரீட்டா உள்ள கிராமம் வெள்ள நீரில் மிதக்கிறது. மின்சாரம், தொலைபேசி என எதுவும் இல்லை.
இப்படிப்பட் சூழ்நிலையில்தான் ரீட்டாவுக்கு படகில் பிரசவம் நடந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு ரீட்டா அழைத்துச் செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்.
மாவட்டம் முழுவதும் இதுவரை ரீட்டாவைப் போல 3 பெண்களுக்கு இப்படி வெள்ளத்திற்கு மத்தியில் பிரசவம் நடந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.