நவம்பரில் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை
தென்காசி: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
தென்காசி ரயில் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில்பாதை பிளாட்பாரம் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் வேலு பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான 47 கிமீ நீள அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ரூ.357 கோடி ரூபாய் செலவில் நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது.
மலைப்பகுதியாகவும், அதிகமான குகைகள் உள்ள பாதையாகவும் இருப்பதால் கிலோ மீட்டருக்கு ரூ.7 கோடி ரூபாய் வரை செலவாகிறது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கோட்டை முதல் திருத்தங்கல் வரையுள்ள பயணிகளுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் வகையில் நிலைய வாரியாக டிக்கெட் ஓதுக்கிடு வழங்கப்படும். பிளாட்பாரம் கட்டணத்தை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
தீவிரவாதம் என்பது உலகளவிய பிரச்சனை. ரயில்வே துறையை பொறுத்தமட்டில் உடைகளை சோதனையிடுகிறோம். மோப்ப நாய்கள் மூலம் சோதனையிடுகிறோம். வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதற்கும் அவற்றை செயல் இழக்க செய்வதற்கும் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மெட்டல் டிடெக்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாருக்கு கூடுதலாக 29 வித அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை-திண்டுக்கல் இடையே இரட்டை டிராக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் செங்கோட்டையிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.