ஒரிஸ்ஸாவில் மீண்டும் கலவரம்-போலீ்ஸ் கண் எதிரே கன்னியஸ்திரி பலாத்காரம்
உதயகிரி, ரைகியா ஆகிய பகுதிகளில் கிருஸ்துவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து இந்துக்கள், கிருஸ்துவர்கள் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாயினர். இதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் காந்தமால் மாவட்டத்தில் மட்டும் மதக் கலவரத்துக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 30யைத் தாண்டிவிட்டது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கிருஸ்துவர்கள் ஆவர்.
கன்னியஸ்திரி பலாத்காரம்:
இதற்கிடையே காந்தமால் மாவட்டம் பலிகுடா என்ற இடத்தில் திவ்ய ஜோதி பாஸ்டர் சென்டர் என்ற கிருஸ்துவ மையத்தில் ஒரிஸ்ஸா போலீசாரின் கண் எதிரிலேயே கன்னியஸ்திரி, ஒரு வெறி பிடித்த கும்பலால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதல் நாள் இந்த கிருஸ்துவ மையத்தை தீ வைத்து எரித்த கும்பல் மறுநாள் அங்கு வந்து இந்த கற்பழிப்பை அரங்கேற்றியது. இத்தனைக்கும் அப்போது அங்கு ஒரிஸ்ஸா ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 12 போலீசார் காவலுக்கு இருந்துள்ளனர்.
கன்னியஸ்திரியை காப்பாற்றுமாறு பாஸ்டன் செல்லன் என்பவர் மன்றாடியும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அவரையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது.
மேலும் கன்னியஸ்திரியை ஒரு கட்டிடத்துக்குள் உடைகளைக் கிழித்து இழுத்துச் சென்ற அந்தக் கும்பல் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சென்றது.
இதில் கொடுமை என்னவென்றால், பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒருவன் திரும்பி வந்து அங்கு காவலுக்கு இருந்த போலீசாருடன் பல மணி நேரம் பேசி பொழுதைப் போக்கிவிட்டுச் சென்றுள்ளான்.
இந்தக் கொடுமை குறித்து பிரதமருக்கு ஒரிஸ்ஸா கிருஸ்துவ அமைப்புகள் விரிவான கடிதம் எழுதியுள்ளன.
இது குறித்து காந்தமால் மாவட்ட எஸ்பி பிரவீண் குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது. இதுவரை இச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.