ரூ.300 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இறப்பு சான்றிதழ் பெறுவற்கு ரூ. 300 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஞானசுந்தரி. இவருடைய கணவர் கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.
ஞானசுந்தரி கணவரது இறப்பு சான்றிதழ் கேட்டு விளாத்திகுளம் தாலூகா அலுவலக வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியமணியை அணுகினார். ஆனால் அவர் தனக்கு ரூ.300 லஞ்சம் தந்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்றார்.
இதுகுறித்து ஞானசுந்தரி லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் புகார் செய்தார். அவரது ஆலோசனை படி நேற்று மாலை ஞானசுந்தரி விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் சென்று ஆர்.ஐ ஆரோக்கியமணியிடம் ரூ.300 கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஏடிஎஸ்பி பெருமாள்சாமி மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்றனர்.