முதல்வர் வீட்டுக்குள் நுழைந்த நபர் கைது
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் திடீரென புகுந்த நபரை போலீஸார் பிடித்துக் கைதுசெய்தனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நுழைய அடுத்தடுத்து பலர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி வீட்டுக்குள்ளும் சிலர் நுழைய முயன்று பிடிபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முதல்வர் வீட்டிற்குள் நுழைவதற்காக இரும்பு கேட்டை திறக்க முயற்சித்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர். இருப்பினும் அந்த நபர் போலீசாரை கீழே தள்ளி விட்டு உள்ளே செல்ல முயன்றார்.
ஆனால் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்த நபர், முதல்வரிடம் மனு கொடுக்கப் போகிறேன், உள்ளே விடுங்கள் என்று கூறினார்.
அவரின் பேச்சும், செயலும் குழப்பமாக இருந்ததால், அந்த நபரை போலீஸார், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் வேலாயுதம் (40), சொந்த ஊர் தென்காசி என்று தெரிய வந்தது. மன நலம் பாதிக்கப்பட்டவர் போலத் தோன்றுகிறார்.












Click it and Unblock the Notifications