போலி சான்றிதழ் மோசடி: வாலிபர் கைது
நெல்லை: பிறப்பு, இறப்பு, வருமானம் போன்ற அரசு சான்றிதழ்களை போலியாக தயாரித்து மோசடி செய்து வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வடநத்தம்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் முருகையா. இவர் தனக்கு வழங்கப்பட்ட வருமான மற்றும் சாதி சான்றிதழ்களில் அரசு முத்திரை இல்லை என்று விஏஓ மாரியப்பனிடம் புகார் கூறினார். மேலும் அந்த சான்றிதழ்களி்ல் அரசு முத்திரை பெற்று தருமாறு கோரினார்.
அவர் கொடுத்த சான்றிதழை வாங்கி சரிபார்த்த பார்த்த விஏஓ மாரியப்பன், அதில் தனது கையெழுத்து இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த சான்றிதழை யாரிடம் இருந்து பெற்றார் என்பது குறித்து முருகையாவிடம் விஏஓ விசாரித்தார்.
வீரசிகாமணியை சேர்ந்த சுதாகர் என்பவர் இந்த இரண்டு சான்றிதழ்களையும் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பணம் பெற்று வாங்கித் தந்ததாக முருகையா தெரிவித்தார். இதுகுறித்து மாரியப்பன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸார் சுதாகரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிறப்பு, இறப்பு, வருமானம், ஜாதி சான்றிதழ்கள் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு போலி சான்றிதழ்களை வீட்டிலேயே தயாரித்து வழங்கியது தெரிய வந்தது. இவரிடம் பலர் ஏமாந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ, மண்டல துணை தாசில்தார், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரி ஆகியோரது பெயர்களில் இருந்த போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அங்கிருந்து பல போலி சான்றிதழ்களையும் கைப்பற்றினர். இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார். கைதான சுதாகரின் தந்தை சிவகுமார் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications