3 மாதங்கள் மூடப்படும் திருச்சி காவிரி பாலம்
திருச்சி: திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் உள்ள காவிரிப் பாலம் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று மத்திய நெஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கட்டப்பட்டு வரும் புதிய பாலப் பணிகளை மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
புதிய பாலப் பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்க்குள் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்படும். காவிரி ஆற்றில் நான்கு வழிச் சாலைக்காகக் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய பாலம் மூன்று மாதங்களுக்கு மூடப்படும்.
தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கீழ் காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால் கட்டுமானப் பொருள்கள், கனரக இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு போதிய இடவசதி இல்லை. அத்துடன், சம்பா பயிர் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால் காவிரி ஆற்றில் தண்ணீரை தற்போது நிறுத்தவும் இயலாது.
எனவே, காவிரி ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய பாலப் பணிகள் விரைவாக நடைபெறுவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய காவிரிப் பாலத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட கலெக்டர் கலந்து பேசிய பின்பு பாலத்தை மூடுவது குறித்த கலெக்டர் அறிவிப்பார் என்றார்.