குழந்தை கவலைக்கிடம்: போலி நர்ஸிடம் விசாரணை- மருத்துவமனைக்கு சீல்
சாத்தான்குளம்: போலி நர்ஸ் அளித்த சிகிச்சையால் மூன்றரை வயது குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகேயுள்ள வசவப்பநேரியில் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவமனை ஒன்று இயங்கி வந்தது. அரசு மருத்துவர் ஒருவர் மாதம் ஒருமுறை அங்கு சென்று உதவி செய்து வருகிறார். மற்ற நாட்களில் முறையாக மருத்துவம் படிக்காத பெண் ஒருவர் சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.
வசவப்பநேரியை சேர்ந்த மகாலிங்கம், விவசாயி. இவரது மூன்றரை வயது மகன் சுப்புராம். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுப்புராமை கடந்த 26ம் தேதி அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு சாலைபுதூரை சேர்ந்த கிங்ஸ்லி என்பவரது மனைவி செல்வி, குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
சுப்புராமுக்கு செல்வி ஊசி போட்டு அனுப்பினார். சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மகாலிங்கம் சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போலி நர்ஸ் செல்வியை விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications