கையெழுத்தானது இந்தியா - பிரான்ஸ் அணு சக்தி ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக நிலவி வந்த அணு தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டுள்ளது.
எல்சி அரண்மனையில்,பிரதமர் மன்மோகன் சிங், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் தரப்பில் அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கரும், பிரான்ஸ் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கோச்னர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் அடிப்படை முதல் அணு ஆய்வு வரையிலான பல தரப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகும். அணு உலைகள், அணு எரிபொருள், அணு பாதுகாப்பு தொழில்நுட்பம், கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள், அணு எரிபொருள் மறுசுழற்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றை பிரான்ஸ் இந்தியாவுக்கு சப்ளை செய்யும்.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி இந்தியாவுக்கு அணு வர்த்தகம் தொடர்பான சலுகையை அளிக்க என்.எஸ்.ஜி. அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்தியா மேற்கொண்டுள்ள முதலாவது அணு சக்தி ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக காத்துள்ளது. பிரதிநிதிகள் சப அனுமதி அளித்து விட்டது. செனட் சபை இன்னும் அனுமதி தராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்வெளித்துறை ஒப்பந்தம்
இதேபோல விண்வெளித்துறையிலும் இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தங்களுக்குப் பின்னர் இந்தியாவும், பிரான்ஸும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்களும் ஸ்திரமாக்கப்படும். அதில் இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன. அதேபோல மிராஜ்-2000 போர் விமானத்தை மேம்படுத்துவது குறித்த விவாதங்கள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடையும். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2025க்குள் 40 அணு உலைகள்
இந்திய-பிரெஞ்சு அணு ஒப்பந்தம் குறித்து தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) பொதுச் செயலாளர் அமீத் மிஸ்ரா கூறுகையில், அரீவா, அல்ஸ்டோர்ம், இடிஎப் ஆகிய பிரெஞ்சு அணு சக்தி நிறுவனங்கள், இந்தியாவிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் ஈரோ மதிப்பிலான ஆர்டர்களைப் பெறும் வாய்ப்பு உள்ளதாக ெதரிவித்தார்.
இந்தியாவிடம் தறஅபோது 17 அணு உலைகள் உள்ளன. ஐந்து புதிய ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் 40 அணு உலைகளை கட்ட இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய அணு சக்தித் துறையின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.