இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: ராஜா
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நடந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ராஜா இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அறவழியில் எதிர்த்து போராடிய மாபெரும் மனிதரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இந்து, முஸ்லிம் இடையே மதநல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் கடைசிவரை போராடினார். ஆனால் இப்போது ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடைபெற்று வருகின்றன.
இலங்கையிலும் மதத்தின் அடிப்படையில் மதவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
புத்தமதத்தின்அன்புவழியை போதிக்க வேண்டிய பிக்குகளே பலாத்காரவாதிகளாக மாறி தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.
இது இலங்கையின் உள் விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதல் இந்தியாவையும் பாதிக்கக்கூடியதாகும். அங்கே தாக்கப்படும் தமிழர்கள் இங்கேதான் ஓடி வருகிறார்கள்.
எனவே இந்தியாவை பாதிக்கும் இந்த பிரச்சனையை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. இது ஒரு குறிப்பிட்ட இயக்கத் தையோ, குறிப்பிட்ட தலைவரையோ ஆதரித்து நடக்கும் போராட்டம் அல்ல; தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.
தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கப்படவேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ராஜபக்சே அரசு கொடுங்கோல் அரசாக மாறி தமிழ் இனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கையில் தற்போது அந்நாட்டு அரசு பெற்று வருவதாக கூறப்படும் வெற்றி நிரந்தர வெற்றியாக இருக்க முடியாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அரசியல் ரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு மருந்துகள், உணவு கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் 3 இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய தூதரகம் குண்டுவைத்து தாக்கப்பட்ட போது இது ஒரு தேசிய துக்கம் என்று கூறிய மத்திய அரசு, இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்பட்டது பற்றி மவுனம் சாதித்துள்ளதே ஏன்?
இலங்கைக்கு இந்திய அரசு அறிவிக்கப்படாத ராணுவ உதவி செய்கிறதோ என்ற கடுமையான சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதை இந்திய அரசு மறுக்க தயாரா? அவ்வாறு ராணுவ உதவி அளித்தால் அதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறோம். இலங்கை குறித்த இந்தியாவின் கொள்கை மாற வேண்டும். மறைமுக ராணுவ உதவி நிறுத்தப்பட வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். மத்திய அரசை நாங்கள் வெறும் அணுசக்தி ஒப்பந்தத்திற்காக மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை பிரச்சனைக்காகவும் எதிர்த்தோம் என்று திமுக தலைவருக்கு கூறிக்கொள்கிறோம்.
தமிழ் மக்களின் உணர்வை வெளியிடும் இந்த போராட்டம் தொடர வேண்டும். அதற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடுவோம் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications