மங்களூரில் 12 தீவிரவாதிகள் சிக்கினர் - குண்டுவெடிப்பில் தொடர்பு?
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உள்பட 12 தீவிரவாதிகளை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை அரங்கேற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து மும்பை, டெல்லி போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மும்பை பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் நேற்று மங்களூர் வந்தனர். கர்நாடக போலீசாருடன் இணைந்து மங்களூரில் உள்ள உல்லாலா என்ற பகுதியில் சுபாஷ் நகர், சொம்புகட்டே, பந்தர், முக்கச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 11 மணி முதல் 2 மணி வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முக்கசேரியில் நடந்த வேட்டையில் 2 பேர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், முகம்மது அலி, நெளஷத், இஷாத் உள்ளிட்ட 9 பேர் சிக்கினர். அனைவரும் தீவிரவாதிகள் ஆவர். அவர்களிடமிருந்து பெருமளவிலான டெட்டனேட்டர்கள், ரூ. 12 லட்சம் ரொக்கப் பணம், ஏராளமான சிடிக்கள், ஐந்து நாட்டு வெடிகுண்டுகள், மொபைல் டைமர், அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மங்களூர் நகர மேப்பும் அவர்களிடமிருந்து சிக்கியது.
இவர்களுக்கு பெங்களூர் உள்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
சிமி அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவருமே மங்களூரைச் ேசர்ந்தவர்கள் ஆவர்.
இந்த வேட்டையில் 150 போலீஸார், புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்தபடி தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேடுதல் வேட்டையின்போது ஒரு இடத்தில் மசூதி இருந்தது. அங்கு யாரும் வராமல் போலீஸார் தடுத்து விட்டனர். அதன் பின்னரே அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 15 வயதுதான் ஆகிறது என்றும் கூறப்படுகிறது.