'கிரீமிலேயர்': வருமான வரம்பு ரூ. 4.5 லட்சமாக உயர்ந்தது
டெல்லி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை ரூ. 4.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதியானவர்கள், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் உள்ள குடும்பத்தினர், க்ரீமி லேயர் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வருமான உச்சவரம்பு கடந்த 1993ம் ஆண்டு ரூ.1 லட்சமாகத் இருந்தது. கடந்த 2004ம் ஆண்டில் இது ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்கள் என்ற பிரிவையே நீக்கி அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. மேலும் பல மாநில அரசுகள், வருமான உச்சவரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
இதையடுத்து நடந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் டெல்லியில் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
தற்போதுள்ள விலைவாசியில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் கொண்டவர்களால் குழந்தைகளுக்கு ஒழுங்காக கல்வி கூட தர முடியாது என கர்நாடக மாநில பிற்பட்டோர் நல கமிஷன் தலைவர் துவாரகநாத் கூறினார். இதனால் க்ரீமி லேயர் வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்துவதே பிற்பட்டோருக்கு உதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் பரிந்துரையின் பேரில் சமூக நீதித்துறை இதுகுறித்து விவாதித்தது. உள்துறை, சட்டம், மனித வளம், மலைவாழ் மக்கள் உறவு உள்ளிட்ட அமைச்சகங்களுடன் விவாதம் நடந்தது.
கிரீமி லேயர் வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சம் தாஸ் முன்ஷி இன்று கூறினார்.
கிரீமி லேயர் உயர்த்தப்பட்டதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கருத்துக்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. பொது மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது என்று சமூக நீதித்துறை அமைச்சகம் தெரவித்துள்ளது.












Click it and Unblock the Notifications